மாளிகைக்காடு நிருபர்
குவைத் நாட்டின் அந்-நஜாத் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பினால் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்ட நிந்தவூர் ஸைத் இப்னு ஸாபித் குர்ஆன் மத்ரஸாவை மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (19) திங்கட்கிழமை நடைபெற்றது.
அரச காரியாலயங்கள், பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் வழங்குதல் மற்றும் பல சமூக நல வேலைத்திட்டங்களை அந்நூர் சமூக அமைப்பு மக்களுக்காக தொடர்ந்தும் பல ஆண்டுகளாக நாடாளாவிய ரீதியில் செய்து வருகின்றது. அவர்களின் வேலைத்திட்டத்தின் ஒரு கட்டமாக அந்நூர் சமூக அமைப்பின் பிரதேச இணைப்பாளர் ஐ.எல். றஸ்மி (றிசாட்) யின் ஒழுங்கமைப்பில் இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.எம். அலியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குர்ஆன் பாடசாலை மாணவர்களின் நலன்கருதி இவ்வேலைத்திட்டத்தை பாடசாலை நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாக இன்று கையளித்தார்.
இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. தாஹீர், ஏறாவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லீம், இலங்கை அந்நூர் சமூக அமைப்பின் தேசிய இணைப்பாளர் ஏ.எம். நளீம், அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ. எல். என். ஹுதா, அந்நூர் சமூக அமைப்பின் செயற்பாட்டாளர்கள், உலமாக்கள், உட்பட மதரஸா ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.