ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் நேற்று இலங்கை தொடர்பான விவாதம் நடைபெற ஏற்பாடாகியிருந்தது.
இலங்கை நேரப்படி நேற்று இரவு 9.00 மணியளவில் இலங்கை தொடர்பான விவாதம் ஆரம்பமாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் மிச்செல் பச்லெட் இலங்கை தொடர்பான அறிக்கையை உத்தியோகப்பூர்வமாக வெளியிடுவதன் மூலம் அதன் சாராம்சம் ஒன்றை பேரவையில் முன்வைப்பாரென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில், இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
“இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைப் பாதுகாப்பதுடன் சட்டத்தின் ஆட்சியைப் புறக்கணித்துச் செயற்பட்டுவரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையின் சர்வதேச பங்காளிகளும் கடந்தகால மீறல்களுக்கான நீதிநாட்டப்படுவதற்கும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படுவதற்குமான அழுத்தங்களைத் தொடர்ந்து வழங்குவார்கள் என்று பாதிக்கப்பட்ட மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள்.
எனவே மனித உரிமைகள் நிலைவரத்தில் உண்மையான முன்னேற்றம் அடையப்படுவதை இலக்காகக்கொண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை அரசாங்கத்தின்மீது பிரயோகித்துவரும் அழுத்தத்தை இருமடங்காக்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.”
மேலும், இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மிகவும் கரிசனைக்குரிய மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதுடன் மனித உரிமைகள் நிலைவரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகக் கூறுகின்ற இலங்கை அரசாங்கத்தின் கருத்திற்கு முரணானதாகவும் அமைந்துள்ளது.