நாடளாவிய ரீதியில் தொடர் மின்துண்டிப்பின் காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களை இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துர்நாற்றம் மற்றும் நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சிகள் உள்ளிட்ட பதப்படுத்தப் பட்ட உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது கொள்வனவு செய்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன குறிப்பிட்டார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனைத் குறிப்பிட்டார்.
சென்ற இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்றதாகவுள்ள இறைச்சி மற்றும் பாலை தொடர்ந்து விற்பனை செய்து வந்த 387 கடைகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ள தாகவும் அவர் குறிப்பிட்டார்.
7 மணி நேர மின்துண்டிப்பினால் குளிர்சாதன பெட்டிகள் செயற்படாமையினால் உணவுப் பொருட்கள் பழுதடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.