நூருள் ஹுதா உமர்
திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் தோன்றிய மாணவிகளின் ஆடை விடயத்தில் என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கூறி ஜனாதிபதி செயலகம்மாற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கும் கடிதமொன்றை அனுப்பியுள்ளது.
திருகோணமலை சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் தாம் அணிந்து வரும் பர்தாவினையும் காட் சட்டையினையும் கழற்றி வைத்துவிட்டுத்தான் வகுப்பறைகளுக்குள் அனுப்பப்படுவதாக திருகோணமலை கள விஜயத்தில் கிழக்கின் கேடயத்தினர் அறிந்துகொண்டதாக இதுதொடர்பில் உண்மைத்தன்மையை கண்டறிந்து தவறு செய்தவர்களுக்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கிழக்கின் கேடயம் சார்பில் அதன் தலைவர் எஸ் எம் சபீஸ் கையெழுத்திட்ட எழுத்துமூல கடிதம் ஒன்றினை ஜனாதிபதி, கல்வியமைச்சர், ஆளுநர், மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர், திருகோணமலை சண்முகா பாடசாலை அதிபர் போன்றோருக்கு கடந்த மாத நடுப்பகுதியில் அனுப்பப்பட்டிருந்தது.
அக்கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் நோக்கிலையே மேற்படி கடிதம் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், கிழக்கின் கேடயத்தின் தலைவருமான எஸ். எம். சபீஸ்,
தற்போது கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக இருப்பவர் ஒரு பெண். அவருக்கு சகல இன பெண்களின் ஆடை கலாச்சாரம் பற்றி நன்றாக தெரியும் என நாம் நம்புகின்றோம் . பக்கசார்பில்லாமேல், நடுநிலை தன்மையுடன் விசாரணைகளை மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுவார் என்று முழு நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இந்த ஆடை விவகாரம் தொடர்பில் திருகோணமலை சண்முகா வித்தியாலய முஸ்லிம் மாணவிகளினது கருத்துக்களையும் சேகரித்து வைத்துள்ளோம். இலங்கை பிரஜைகளுக்கு அரசின் சட்டத்தினூடாக உறுதிப்படுத்தப்பட்ட எந்த அடிப்படை மனித உரிமைகளையும் மலினப்படுத்தவும் கேள்விக்குட்படுத்தவும் எவரையும் அனுமதிக்க விடமாட்டோம் என்றும் கூறினார்.