(நூருல் ஹுதா உமர், பாறூக் ஷிஹான்)
இளைஞர்கள் அபிவிருத்தி பணிகளில் இன மற்றும் பிரதேச வாதங்கள் இல்லாமல் நேர்மையான முறையில் தேசிய நலன்களைக் கவனத்திற் கொண்டு செயற்பட்டு கொண்டிருக்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய கிழக்கு மாகாண அலுவலகம் சாய்ந்தமருது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.
அதனை அம்பாறை நகரத்திற்கு கொண்டு செல்ல வேண்டி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கையிணை எடுக்கவேண்டும் எனவும் இவ்விடயத்தில் அம்பாறை மாவட்டதினுடைய அரசியல்வாதிகள் அடங்களாக கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் தலையிட்டுஇதற்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என்றும் கோரிக்கையினை முன்வைத்து முன்னோடி இளைஞர் தலைவர்கள் ஊடக சந்திப்பொன்றினை நடத்தினர்கள்.
இளைஞர் பாராளுமன்ற கப்பல் துறைமுகங்கள் பிரதியமைச்சருமான எஸ்.எம். றிஹான் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பிரதிநிதியாகிய சிப்னால் அஷீஸ், இளைஞர் கழகங்களின் சம்மேளன அம்பாறை கிளையின் பிரதித்தலைவரான எம்.எம். ருக்ஸான், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற நிஸ்கோ மாவட்ட கிளையின் பணிப்பாளர்சபை உறுப்பினரான ஹிஸாம் ஏ பாவா, சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன தலைவராகிய எம். சாப்னாஸ், கிழக்கின் கேடயம் அமைப்பின் பிரதிநிதி இஸட். சக்கி ஆகியோர் இணைந்து நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (22) இரவு சாய்ந்தமருது சீ பிரிஸ் இல் நடைபெற்றது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் எந்தவித தடைகளுமின்றி முறையாக இயங்கிவருகின்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகத்தினை அதனுடைய நடவடிக்கைகளை சீர்குலைக்கின்ற வகையில் செயற்பட்டு வருவதையிட்டு மிகுந்த மன வேதனை அடைகின்றோம். ஓரிரு உத்தியோகத்தர்களின் சுயநல தேவைகளுக்காக இளைஞர்களினது அபிலாஷைகளினை விட்டுக்கொடுக்க முடியாது. போக்குவரத்தினை காரணம் காட்டி இப்போது இருக்கும் காரியாலயத்தினை பிரதான வீதியிலிருந்து தூரம் கூடுதலாக இருப்பதாக கூறும் இவர்கள் . இதனை இப்போது மாற்ற எடுக்கும் இடமானது பிரதான வீதியிலிருந்து இப்போது இருக்கும் காரியாலயத்தினது தூரத்தை பார்க்க மிக அதிகமான தூரமாக அமைந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாகும்.
ஓரிரு சுயநல சிந்தனைகளை கொண்ட உத்தியோகத்தர்களுக்காகவே எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் தமிழ் பேசும் இளைஞர்கள் பயன்பெறுகின்ற குறித்த அலுவலகத்தினை ஏன் இவர்கள் இடம் மாற்றம் செய்ய வேண்டும் ? இந்த நாட்டில் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுகளை பற்றியும் இளைஞர்களினது அபிவிருத்திகள் பற்றியும் மக்களும் அரசாங்கமும் கருத்துகள் கூறிவரும் இச் சூழ்நிலையில் அதனைச் சிதைக்கும் வகையிலான இவ்வாறான நடவடிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே சாய்ந்தமருதில் இயங்கிவருகின்ற கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ளும் வகையில் அதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு. ஜனாதிபதி, பிரதமர்மற்றும் இளைஞர் விவகார விளையாட்டுத் துறை அமைச்சர், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தவிசாளர் ஆகியோருக்கும் ஏற்கனவே இது சம்பந்தமான எழுத்து மூல மகஜர்கள் கையளிக்கப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக அவர்கள் தலையிட்டு இவ்வநீதிக்கான நீதியினை உடனடியாக எமக்கு பெற்றுத்தரவேண்டும் எனவும் தெரிவித்தனர்.