தம்மால் முடியாது என்பதனினை இந்த ஆட்சியாளர்கள் அனைத்து விதத்திலும் நிரூபித்துவிட்டார்கள், வீட்டுக்கு செல்லுங்கள் என நாட்டு மக்கள் வலியுறுத்தவும் ஆரம்பித்துவிட்டார்கள். எனவே, இந்த ராஜபக்சகளது ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய நேரம் வந்திருக்கின்றது. அதற்கு நாமும் தயார் நிலையில் உள்ளோம்.
என்று தேசிய மக்கள் சக்தியினுடைய தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய அநுரகுமார திஸாநாயக்க கூறினார்.
தேசிய மக்கள் சக்தியினுடைய மாபெரும் அரச எதிர்ப்புப் பேரணியும் போராட்டமும் நேற்று மாலை நுகேகொடையில் இடம்பெற்றது.
இதில் தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும், தேசிய வளங்கள் விற்பனை செய்யப்படுவதற்கான எதிர்ப்பினைத் தெரிவித்தும், ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும், நாட்டில் தலைதூக்கியிருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறும் கோரியே இந்தப் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
தேசிய மக்கள் சக்தியினுடைய தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்ற அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களினுடைய பிரமுகர்களும், பெருந்திரளான மக்களும் பங்கேற்றிருந்தார்கள். இதனால் நுகேகொடை பகுதியில் கடும் வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தது.
இதன்போது உரையாற்றிய அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி கோட்டாபயவுடைய தலைமையில் இன்று சர்வகட்சிகள் மாநாடு நடைபெற்றது. நாட்தினுடைய வளங்களைக் கொள்ளையடித்த பஸில், மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணில், தரகுப்பணம் வழங்கிய கப்ரால் உள்ளிட்டவர்கள் இதில் பங்கேற்றார்கள். இவர்களுடன் என்ன பேச – கலந்துரையாட முடியும்? நாங்கள் அங்கு சென்றிருந்தால், கோட்டா வீட்டுக்குச் செல்லுங்கள் என்பதையே கூறியிருப்போம்.
நிர்வாகக் கட்டமைப்பில் ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடுகின்றது . கடந்த 70 ஆண்டுகளில் நாட்டைச் சீரழித்துவிட்டார்கள். முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் ஊழல்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டுக்கொள்கின்றார்கள். இதுதான் எமது நாட்தினுடைய அரசியல். அவர்கள் இவர்களைப் பற்றியும், இவர்கள் அவர்களைப் பற்றியும் குறைகூறுவது தான் இங்கு வேடிக்கையாகிவிட்டது.
எனவே, ராஜபக்சகளினது ஆட்சியை விரட்டியடிப்பது மட்டுமல்ல, புதியதொரு கலாசாரத்தை நாட்டில் உருவாக்கும் பொறுப்பும் எமக்கு உள்ளது என்றும் மக்கள் சக்தி மூலம் இந்த ஆட்சியை விரட்ட முடியும்” என்றும்சூளுரைத்தார்.