நூருல் ஹுதா உமர்
முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை முறையாக அணுகி எவ்வகையான பிரச்சினைகள் உள்ளது என்பது தொடர்பில் ஆராய்ந்து தொகுப்பதும் அதற்கான தீர்வுகள் என்ன என்பதைப் பற்றியும் தலைவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து கலந்துரையாடி ஓர் தீர்மானத்தை மேற்கொண்டு அதனை ஆவணப்படுத்துவது காலத்தின் தேவையாக உள்ளது. இது தொடர்பில் ஆராயும் சர்வ முஸ்லிம் கட்சி மாநாடு ஒன்றை அவசரமாக கூட்டி இவ்விடயத்தை மேற்கொண்டு செய்யுமாறு கிழக்கின் கேடயம் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு உட்பட ஐக்கிய சமாதான கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி போன்ற இலங்கையில் உள்ள முஸ்லிம் கட்சிகள் சகலதையும் அத்துடன் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகலரையும் கேட்டுக்கொள்கிறது என கிழக்கின் கேடயம் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.
அந்த கடிதத்தில் எமது நாட்டில் வாழும் முஸ்லிங்களுக்கு காணிப்பிரச்சினைகள், முஸ்லிம் பெண்களின் ஆடை உரிமை, ஒரே நாடு ஒரே சட்டம், விவாக- விகாரத்து சட்ட திருத்தம், அரபு கலாபீடங்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்கள் மீதான கெடுபிடி, இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் உட்பட உயர் அதிகாரிகளுக்கு இடம்பெறும் அநீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், கல்முனை, வாழைச்சேனை, மூதூர், தோப்பூர், போன்ற பிரதேசங்களில் உள்ள பிரதேச செயலகங்களின் பிரச்சினைகள், இனப்பிரச்சினை அரசியல் தீர்வில் முஸ்லிங்களின் வகிபாகம், புதிய அரசியலமைப்பில் முஸ்லிங்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல், சாய்ந்தமருது, சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, காத்தான்குடி போன்ற பல்வேறு பிரதேசங்களில் உள்ள உள்ளுராட்சி மன்ற உருவாக்கங்கள் மற்றும் தரமுயர்த்தல்கள், அரசியல் பழிவாங்கல்கள், தேசிய ரீதியாக உள்ள முஸ்லிங்களின் பூர்வீக நிலங்கள் கொள்ளையிடப்படுகின்றமை, முஸ்லிம் வாழ்வியல் ரீதியிலான பிரச்சினைகள் கொழும்பு, கண்டி போன்ற இடங்களில் முஸ்லிம் பாடசாலைகளை அதிகரித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டு விடயங்கள்,பொதுபல சேனாவின் முஸ்லிங்களுக்கு எதிரான காய் நகர்த்தல்கள், நாட்டின் பொருளாதார மீட்சிக்கான ஆலோசனைகள், விவசாயிகளின் உரப்பிரச்சினை, இளைஞர்களின் வேலைவாய்ப்புகளுக்கான திட்டமிடல்கள் உட்பட எண்ணிலடங்காத பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இவற்றை துறைசார்ந்த நிபுணர்களின் உதவியுடன் ஆலோசிக்க வேண்டிய தேவை இருக்கிறது.
அண்மையில் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்ப சிறுபான்மை கட்சிகள் ஒன்றிணைந்த போது அவற்றுக்கு ஆதரவாக கரம்கோர்த்த முஸ்லிம் தலைவர்கள் தமது சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க அரசியல் வேற்றுமைகள் மறந்து முஸ்லிம் சமூகத்தின் இருப்பு மற்றும் நலனுக்காக ஒன்றிணைந்து செயற்படுவது காலத்தின் தேவையாக உள்ளது. சகல முஸ்லிம் கட்சிகளும் ஒரே மேசையில் அமர்ந்து முஸ்லிங்கள் தேசிய ரீதியாக அனுபவித்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வை பெற்றுக்கொடுக்கவேண்டிய காலம் கனிந்துள்ளது. இவ்விடயத்தில் அவசரமாக செயற்பட்டு முஸ்லிங்களின் நிம்மதியான வாழ்வுக்கான செயற்பாடுகளை துரித்தப்படுத்துமாறு கேட்டுக்கொள்வதுடன் முஸ்லிங்களின் பிரச்சினைகள் தொடர்பில் கொள்கை திட்ட வரைபை வரையுமாறும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல எங்களால் முடியுமான சகல ஒத்துழைப்புக்களையும் எந்த நேரத்திலும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.