மாளிகைக்காடு நிருபர் – நூருல் ஹுதா உமர்
இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஏறாவூர் நகர பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜுத் நெறிப்படுத்தலில்
நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் ஏறாவூர் நகரசபை தவிசாளராகிய எம்.எஸ். நளீம், நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினரினுடைய இணைப்புச் செயலாளர் ஏ.ஏ.நாசர், ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஐ. தஸ்லிம், திணைக்கள, கூட்டுத்தாபனங்களின் தலைவர்கள் பிரதேச செயலக அதிகாரிகள் ஆகியோரினது பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற இக் கூட்டத்தில் நடப்பாண்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் மற்றும் அதன் பின்னடைவுகள் என எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி ஆராயப்பட்டது .
இந்நிகழ்வைத் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவுகளில் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை கவனத்தில் எடுப்பது குறித்தும். மட்டக்களப்பினை சூழ 26 சதவீத முஸ்லிம்களும் 4 பிரதேச செயலகங்கள் முஸ்லிம்களுக்காகவும் உள்ளன. இருந்தபோதும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மொத்தக் காணிகளில் 1.54 சத வீதக் காணிகளை மாத்திரமே முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருப்பதால் முஸ்லிம்கள் வாழ்விடத்தினை அமைத்துக் கொள்ள வழிகளின்றி உட்கட்டமைப்புக்களை மேற்கொள்ள முடியாமலும் நெருக்குவாரப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் குறிப்பிடடார்.