நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது நகரசபை விடயம் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்கின்ற தேசிய காங்கிரஸினுடைய தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் கருத்து நகைப்புக்குரியதாக உள்ளது என்று முஸ்லீம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.
ஏ.எல்.எம். அதாவுல்லா (28) திகதி நடத்திய ஊடக மாநாட்டில் சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களை கூறியது மட்டுமன்றி சாய்ந்தமருது நகரசபை விடயத்தை ஒரு விளையாட்டாகவும் அலட்சிய தோரணையிலும் கருத்துக் கூறியிருப்பதானது கண்டனத்துக்குரியது என்று யஹியாகான் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது.
சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையினை வைத்து பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய தேசிய காங்கிரஸினுடைய தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவினால் இனி அவ்வாறானதொரு சபையை பெற்றுத்தர முடியாது என்பது ஊர்ஜிதமாகிவிட்டது.
அவ்வாறு இருக்கும் நிலையில் கால ஓட்டத்தில் நடைமுறைக்கு வரும் என்று அதாவுல்லா கூறியிருப்பது வெறும் வெற்றுக் கதை மட்டுமன்றி பொய் பிரச்சாரமும் ஆகும். தேசிய காங்கிரஸினுடைய தலைவர் எங்கேயும் சாய்ந்தமருதினுடைய நகரசபை விடயமாக பேசத் தேவையில்லை. அவர் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் , ஊடகங்களில் மட்டும் பேசி சாய்ந்தமருது மக்களையும் அவர்களினது நகர சபை கோஷத்தையும் கொச்சைப்படுத்துவதை இனியும் அதாவுல்லாவுக்கு ஆரோக்கியமான விடையமாகாது.
ஆகவே , அதாவுல்லாஹ் , இன்னமும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி அரசியல் நாடகம் நடத்த முயற்சிக்காமல் சாய்ந்தமருதினுடைய நகர சபை விடயத்தில் இருந்து முழுமையாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
அல்லது தனது வெற்றிக்கு பங்களிப்பு செய்த சாய்ந்தமருது மக்களினுடைய 9000 வாக்குகளுக்காவது பரிகாரம் செய்யும் விதமாக தனது மிகுதி இரண்டரை வருட கால எம்பி பதவியினை சாய்ந்தமருதுக்கு வழங்கி நன்றி செலுத்த வேண்டும்.
சாய்ந்தமருது மக்கள் அதாவுல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை அந்த ஊரைச் சேர்ந்தவன் என்பதில் என்னால் உறுதியாக கூற முடியும். சாய்ந்தமருது மக்கள் தமது நகரசபையினுடைய விடயத்தில் அதாவுல்லாஹ்வை இனியும் நம்பவும் கூடாது. அவரது பசப்பு வார்த்தைகளை நம்பி இனியும் ஏமாறவும் கூடாது.
அதைப்போன்று , சாய்ந்தமருது பள்ளிவாசலின் நிர்வாகமும் இனி பள்ளிவாசல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்ற முனையகூடாது , பள்ளிவாசல் பள்ளியின் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் யஹியாகான் மேலும் தெரிவித்துள்ளார்.