கொழும்பு கோள்பேஸில் 6 வது நாளாகவும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அரச தரப்பிற்கு எதிரான தன்னார்வ போராட்டத்தில் இன்றைய(14) தினம் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பகிரங்கமாக வந்து இணைந்து தனது ஆதங்கத்தை வெளியிட்டமை ஆர்ப்பாட்ட களத்திலுள்ள தன்னார்வலர்களை நெகிழ வைத்தது.
தான் மிக நீண்ட தூரத்திலிருந்து இந்த போராட்டத்தில் எப்படியேனும் பங்கு கொண்டே ஆகவேண்டும் எனும் எண்ணத்தில் போக்குவரத்து வசதியற்ற நிலையிலும் பெரும் சிரமத்துடன் இங்கு வந்து கலந்து கொண்டதாக மிகுந்த வேதனையுடன் தெரிவித்தார்.
தன்னை போன்று ஏராளமான பொலிஸார் தமது உள்ளுணர்வை வெளிப்படுத்த முடியாமல் மறைத்து வைத்து கொண்டிருப்பதாக கூறிய அவர் “முதுகெலும்பு இருந்தால், தன்னைப்போல் தைரியமாக களத்தில் இறங்குமாறும்” முப்படையினருக்கும் பகிரங்கமாக கேட்டுக்கொண்டார்.
இதேவேளை குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் பதவிக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்காக தாம் அனைவரும் போராடுவோம் எனவும் தன்னார்வ ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குறுதி கொடுத்தனர்.