இச்சந்திப்பில் அராஜகவாதத்தை நோக்கி இலங்கை செல்ல ஒருபோதும் அனுமதிக்கப்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளின் கீழ் நாட்டில் ஆட்சி நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நேற்று (26) மாலை அலரிமாளிகையில் ஸ்ரீலங்கா அமரபுர பிரிவின் பிரதான சங்கநாயகமாக கடமையாற்றும் வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரரை சந்தித்து கலந்துரையாடிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதியையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் அமைதியான பொதுப் போராட்டத்தில் பிக்குகள் அடங்கிய தூதுக்குழுவினருடன் தேரர் அண்மையில் இணைந்துகொண்டார்.
இந்த சந்திப்பின் போது, இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக மகாநாயக்க தேரர்கள் கையளித்த கடிதம் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வணக்கத்துக்குரிய சோபித தேரருக்கு அறிவித்தார்.
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் அனைத்து அரசியல் கட்சிகள், மகாநாயக்க தேரர்கள் மற்றும் ஏனைய அனைத்து மதத் தலைவர்களின் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சரிசெய்ய அரசியல் ஸ்திரத்தன்மை அவசியம் என்று கூறிய பிரதமர், நாடு அராஜகவாதத்தை நோக்கி செல்வதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.
சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர், புதிய பிரதமர் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டால் தனது பதவியை இராஜினாமா செய்யத் தயார் என பிரதமர் தெரிவித்தார்.
தனது இராஜினாமாவைத் தொடர்ந்து மாற்று நபரை நியமிப்பதற்கு கணிசமான கால அவகாசம் தேவைப்படும் என பிரதமர் சுட்டிக்காட்டியதாகவும், இதனால் நாடு அராஜகவாதத்தை நோக்கிச் செல்லக் கூடும் எனவும் தேரர் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் நாட்டை ஆள முடியாது என பிரதமர் தொடர்ச்சியாக தெரிவித்து வருவதாக வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.