(அஸ்லம் எஸ்.மௌலானா)
சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவராகப் பணியாற்றி, தனியான நகர சபைக்கான போராட்டம் உட்பட ஊர் நலன்சார் விடயங்களில் அர்ப்பணிப்புடன் முன்னின்று உழைத்த மர்ஹூம் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா அவர்களின் பெயரை சாய்ந்தமருதிலுள்ள வீதியொன்றுக்கு சூட்ட கல்முனை மாநகர சபை தீர்மானித்துள்ளது.
கல்முனை மாநகர சபையின் 49ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் இடம்பெற்றபோது மாநகர சபையின் சாய்ந்தமருது சுயேட்சைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் றபீக் அவர்கள் இதற்கான பிரேரணையை சமர்ப்பித்திருந்தார்.
இதுவரையில் எந்தவிதமான பெயரும் சோதிடப்படாமல் இருப்பதால் இவ்வீதியிலேயே தான் மர்ஹூம் வை.எம்.ஹனிபா அவர்கள் வாழ்ந்த வீடும் அமைந்திருப்பதினாலும் இதனை சுட்டிக்காட்டிய மாநகர சபை உறுப்பினரான எம்.எஸ்.அப்துல் றபீக், இப்பகுதியினை சேர்ந்த மக்கள் இவ்வீதிக்கு அன்னாரினது பெயரினை சூட்டுமாறு வேண்டுகோளினை விடுத்திருப்பதாகவும் இதனை எமது மாநகர சபை அங்கீகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து இப்பெயர் சூட்டும் பிரேரணை உறுப்பினர்களின் சம்மதத்துடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதோடு இணைந்ததாக சாய்ந்தமருது-15,17ஆம் பிரிவுகளை ஊடறுத்து செல்லுகின்ற சனசமூக நிலைய வீதி அல்லது சிலோன் வீதி என இரு பெயர்களினால் அழைக்கப்பட்டு வருகின்ற வீதிக்கு ஜாமிஉல் இஸ்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் வீதி என்கின்ற பெயரினை மாற்றம் செய்வது எனவும் இவ் அமர்வில் தீர்மானிக்கப்பட்டது.