அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு கோரி அரச, அரை அரச மற்றும் தனியார் துறைகளின் தொழிற்சங்கங்கள் இன்று நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.
முதலீட்டுச் சபை (BOI) வலயத்துடன் இணைந்த ஊழியர்கள் குழு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கட்டுநாயக்க அவெரிவத்தை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள அனைத்து ஆடைத் தொழிற்சாலைகளின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி – மாத்தறை பிரதான வீதிக்கு அருகில் ஊழியர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
ஹட்டனில் உள்ள தோட்டத் தொழிலாளர்களும் இன்று நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹட்டன், டிக்கோயா பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் ஹட்டன் – பகவந்தலாவ பிரதான வீதியில் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பல ரயில்வே தொழிற்சங்கங்களின் ஊழியர்களும் இன்று பணிக்கு சமூகமளிக்கவில்லை.
இன்று குறைந்த எண்ணிக்கையிலான ரயில்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதால் மாற்றுப் போக்குவரத்தைப் பயன்படுத்துமாறு புகையிரத திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளதையடுத்து ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன.
இதேவேளை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.
வழமை போன்று செயற்பாடுகள் இடம்பெறுவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.