பிரதி சபாநாயகர் பதவி மற்றும் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள அவநம்பிக்கை பிரேரணைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இன்று விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில், முற்பகல் 9.15க்கு இந்தக் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற அமர்வின் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
பிரதி சபாநாயகர் பதவிக்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில், இம்தியாஸ் பாகீர் மாகரின் பெயர் பரிந்துரைக்கப்பட உள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இன்று சபையில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர, தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகிய பின்னரே தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் பதவி விலகாவிட்டால், தேசிய இணக்கப்பாட்டு அரசாங்கம் உருவாகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.