முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் இன்று கடுமையாக சாடியுள்ளார்.
புதிய பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற வாக்கெடுப்பு பாராளுமன்றத்திற்குள் அரங்கேறும் நாடகத்தை அம்பலப்படுத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சியில் உள்ள பல பாராளுமன்ற உறுப்பினர்களை அணுகி வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்குமாறு வலியுறுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவளிப்பதாக கூறியுள்ள பிரதி சபாநாயகர் பதவிக்கு ரஞ்சித் சியம்பலாபிட்டியவை மறுபெயரிட்டமைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவை பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் கடுமையாக சாடினார்.
“இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் ஆதரவாக 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்பதை வாக்கெடுப்பு அம்பலப்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் 148 எம்.பி.க்கள் ராஜபக்சக்களுக்கு ஆதரவாக இருந்து அவர்களை காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட எந்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டாலும், நாடகங்களை அரங்கேற்றுபவர்களும், திருடர்களும் ராஜபக்ஷக்களுக்கு எதிராக ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.