பாறுக் ஷிஹான்
அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் காவலரண் பகுதியில் வியாழக்கிழமை (5) இரவு 11 .30 மணியளவில் ஏற்பட்ட சம்பவமொன்றின் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை மற்றும் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையிலான குழு நேற்று வெள்ளிக்கிழமை (6) சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன், குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் தலைமையிலான குழுவினர் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொலிஸார் மற்றும் பொதுமக்களிடம் இவ்விடயம் சம்பந்தமாக விசாரணைகளை ஆரம்பித்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் பதற்றம் ஏற்பட காரணம் சம்பவ இடத்தில் பொலிஸாரினால் நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் நபரொருவர் இறந்து விட்டதாக அங்கு நின்றவர்கள் கூறிய வதந்தியே கலவரமாக மாறுவதற்கு வழியேற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, குறித்த சோதனைச்சாவடி தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளும் ஏற்கனவே வெளியாகியுள்ளதாக தற்போதைய விசாரணைகளிலிருந்து வெளியாகியுள்ளது.
சம்பவ தினமன்று குறித்த சோதனைச் சாவடியை தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர்கள் மோதியதாகவும் அதனால் ஏற்பட்ட விசாரணையின் போது பதற்றம் ஏற்பட்டதாக பொலிஸ் தரப்பினர் குறிப்பிட்டுள்ளதுடன், பொதுமக்கள் பொலிசாரின் அறிக்கை உண்மைக்குப் புறம்பானதென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை, சம்பவம் தொடர்பில் பூர்வாங்க விசாரணை அறிக்கையை உடனடியாக அனுப்புமாறு அக்கரைப்பற்று பொலிஸாரிடம் மனித உரிமை ஆணைக்குழு கேட்டுள்ளது.
சம்பவம், அம்பாறை மாவட்டம் – பாலமுனைப் பிரதேசத்தில் பொலிஸாரின் வீதித் தடைக்காவலரணொன்றினை பொதுமக்கள் தீ வைத்து எரித்துள்ளதோடு, அங்கிருந்த பொலிஸார் மற்றும் ஊர்காவல் படையினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். வியாழக்கிழமை (05) இரவு இச்சம்பவம் நடந்துள்ளது.
வீதித்தடைக்காவலரணில் இருந்த ஊர்காவல் படை உத்தியோகத்தரொருவர் பொதுமகன் ஒருவரை மிகவும் மோசமாகத் தாக்கியதாகவும் அதனையடுத்து அங்கிருந்த பொலிஸ் மற்றும் ஊர்காவல் படை உத்தியோகத்தர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதோடு, வீதித்தடைக் காவலரண் மீது தீ வைத்ததாகவும் சம்பவ இடத்திலிருந்தோர் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து அவ்விடத்துக்கு வந்திருந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுறது.
இதன் போது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். 40 வயதுடைய இமாமுதீன் என்பவரும், 31 வயதுடைய பாஹிர் என்பவரும் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் ஆஷாத் எம்.ஹனீபா தெரிவித்தார்.
இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் 06 பேரும், ஊர்காவல் படையினர் 03 பேரும் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் கூறினார்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பொதுமக்களில் இமாமுத்தீன் என்பவருக்கு கையிலும், பாஹிர் என்பவருக்கு வயிற்றிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஊடகவியலாளர் உட்பட் 10 இற்கும் மேற்பட்ட பொலிசார் பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு ஆரம்பித்த இச்சம்பவம் இன்று அதிகாலை 01.30 மணி வரையிலும் நீடித்திருந்தது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.