கடுவலை நீதிவான் சனிமா விஜேபண்டாரவின் இல்லத்திற்கு பாதுகாப்பு வழங்க நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை கான்ஸ்டபிள் கடமை தவறியமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நீதிபதிகளின் பாதுகாப்பு விவரங்களில் உரிய நேரத்தில் மற்றும் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடுவலை நீதிவான் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து நீதிபதிகளின் பாதுகாப்பை உடனடியாக அதிகரிக்குமாறு காவல்துறைமா அதிபருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பணிப்புரை விடுத்தார்.
கடுவலை நீதவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் பாதுகாப்பு நீக்கம் தொடர்பில் நீதித்துறை சேவை சங்கம் மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் சங்கம் இணைந்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுவலை நீதிவான் சனிமா விஜேபண்டாரவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு நீக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இலங்கை நீதிச் சேவை சங்கம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
நேற்றுமுன்தினம் காலை முதல் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபருக்கு எழுதிய கடிதத்தில் அச்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் பாதுகாப்பை வழங்குமாறு அனைத்துப் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்ட சுற்றறிக்கையை மீறி தலங்கம காவல் நிலைய பொறுப்பதிகாரி நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அச்சங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
இது தொடர்பில் தலங்கம காவல்நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக காவல்மதுறை மா அதிபர் உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை நீதிச்சேவை சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மே 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதைத் தடுக்குமாறு காவல்துறையினர் முன்வைத்த கோரிக்கையை மே 4 ஆம் திகதி கடுவலை நீதவான் நிராகரித்திருந்தார்.
அத்துடன், அன்றைய தினம், நாடாளுமன்றத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 13 பேரை சொந்த பிணையில் விடுவிக்கவும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு சூழலில் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.