இரண்டு உள்ளூர் ஊடக நிறுவனங்களின் நாடாளுமன்ற நிருபர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர்களால் இன்று துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இன்று காலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கையடக்கத் தொலைபேசி மூலம் காணொளிப் பதிவு செய்து கொண்டிருந்த நாடாளுமன்ற செய்தியாளர்களை ஆளும் கட்சி எம்.பி.க்கள் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் இந்திக்க அனுருத்த உட்பட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி கூட்டத்தை முடித்து விட்டு வெளியேறும் போது, பாராளுமன்ற நிருபர்களை துன்புறுத்தியதாகவும், அவர்களது தொலைபேசிகளையும் பறித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
லங்காதீபவின் கூற்றுப்படி, இரண்டு எம்.பி.க்கள் இரண்டு ஊடகவியலாளர்களை தாக்க முற்பட்டனர், அவர்கள் மீது குற்றம் சாட்டி, “எல்லாவற்றிற்கும் நீங்கள் தான் காரணம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான இந்திக்க அனுருத்த மற்றும் டி.வீரசிங்க ஆகியோர் பின்னர் இரண்டு ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளைப் பறித்து சபாநாயகரிடம் ஒப்படைத்ததைக் காணமுடிந்தது.
இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி சஜித் பிரேமதாச, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஊடக சுதந்திரத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்குமாறும், ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது என்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையில், இந்த நபர்கள் ஊடகவியலாளர்கள் என்பது தங்களுக்குத் தெரியாது என்று கூறிய SLPP பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில்முறை கேமராக்களுக்குப் பதிலாக மொபைல் போன்களைப் படம் எடுக்க ஏன் பயன்படுத்தினார்கள் என்று கேள்வி எழுப்பினர்.