பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை முன்மொழிந்தமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை நிவர்த்தி செய்ய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவின் செல்வாக்கு பெற்றதாக பல ஊடக அறிக்கைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையையும் கட்சி பகிரங்கமாக புறக்கணித்துள்ளது.
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு முன்னர் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களில், பிரதி சபாநாயகர் பதவிக்கு எம்.பி அஜித் ராஜபக்சவின் பெயரை முன்மொழியத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதியமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச மேற்படி கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை எனவும், கூட்டங்களில் ஏற்பட்ட பொதுவான இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இந்த வாய்ப்பை வழங்குமாறு கட்சிக்கு தெரிவிக்கவில்லை அல்லது தமக்கு ஆலோசனை வழங்கவில்லை எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகராக நேற்று நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில் அஜித் ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி கவிரத்னவை எதிர்த்து போட்டியிட்ட அவர் 31 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.
பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென பிரதமர் வெளிப்படையாகக் கோரியிருந்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அஜித் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்திருந்தது.
வாக்கெடுப்பை நிறுத்துமாறும், கட்சித் தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடி பெண் எம்பி ஒருவரை பிரதி சபாநாயகராக நியமிக்குமாறும் பல எதிர்க்கட்சி எம்பிக்கள் கோரிக்கை விடுத்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அந்த பிரேரணையை நிராகரித்தது.
பிரதமரின் முந்தைய கோரிக்கையை புறக்கணித்து, முன்மொழியப்பட்ட இரண்டு பெயர்களில் இருந்து பிரதி சபாநாயகரை நியமிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று SLPP அழைப்பு விடுத்தது.