2021 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் கண்காணிப்பாளர் ஒருவர் நச்சதுவவில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மவ்பிம செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை (25) பரீட்சை நிலையத்தில் வைத்து குறித்த நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திகதியில் நடைபெற்ற வரலாறு பரீட்சை தொடர்பான கேள்விக்கு உதவி செய்கிறேன் என்ற போர்வையில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
குறித்த மாணவி அன்றைய தினம் பாடசாலையில் உள்ள ஆசிரியை ஒருவரிடம் இச்சம்பவம் குறித்து தெரிவித்ததையடுத்து, மறுநாள் தனது பெற்றோருடன் ஹிதோகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜூலை 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் புதிய நச்சதுவ நகரை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரது கூட்டாளிகள் இந்த வழக்கை விட்டுக்கொடுப்பதற்காக மாணவியின் குடும்பத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது.
பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 1929 என்ற இலக்கத்தின் ஊடாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்.