
அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியில் 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
கொவிட் நிர்வாகத்துக்காக நன்கொடையாளர்களிடமிருந்து இந்தப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும், தற்போது கொவிட் தொற்றுநோய் கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால், உலக சந்தையில் மருந்துகளின் விலைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, உள்ளூர் மருந்து உற்பத்தியை துரிதமாக அதிகரிப்பதற்கும் தேவையான மூலப்பொருட்களை இந்தியக் கடன் உதவியின் கீழ் பெற்றுக்கொள்வதற்குமான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
இன்று (03) முற்பகல் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் சுகாதாரத் துறை தொடர்பான அவசர விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
ஓயாமடுவ மற்றும் ஹொரண மில்லேவ பிரதேசத்தில் மருந்துகளை உற்பத்தி செய்ய 12 முதலீட்டாளர்கள் முன்வந்துள்ளனர். அடுத்த சில மாதங்களில் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த பிராந்தியங்களில் 200 க்கும் மேற்பட்ட மருந்து வகைகளை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கும் போஷாக்கான உணவை வழங்குவதற்கு சமுர்த்தி மற்றும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு பல மூலங்களிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், உத்தேச வரவு செலவுத் திட்டத்தில் இருந்து இதற்கான நிதியை ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய முன்னேற்றத்தின் அடிப்படையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் சுகாதாரத் துறையின் நடவடிக்கைகள் மீளமைக்கப்படும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.