தேயிலை ஏற்றுமதியில் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை வெளிப்படைத் தன்மையுடன் பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வாரத்திற்கு இருமுறை நடைபெறும் தேயிலை ஏலத்தில் சுமார் 300 ஏற்றுமதியாளர்கள் வருகின்றனர். தற்போது அவர்களுக்கு ரூபாய்களில் சம்பளம் வழங்கப்படுகிறது.
டொலர்களில் தேயிலை ஏலத்தை நடத்துவது தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பெருந்தோட்டத்துறை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பெருந்தோட்டத்துறைக்கு பொறுப்பான அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தோட்டத் துறையின் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டத்தின் அவசியம் குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அமைச்சு அல்லது பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.