முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி கொள்ளுப்பிட்டி காலி முகத்திடலில் அமைந்துள்ள மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம கிராமங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபராக சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாம் பெயரிடப்பட்டதாக மனுதாரர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தம்மைச் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யத் தயாராகி வருவதாகவும், இது சட்டத்திற்கு முரணானது என்றும் அவர் கூறுகிறார்.
எனவே தம்மை கைது செய்ய தடை விதிக்குமாறு நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.