
சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஊடக உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
உள்ளுர் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் நேற்று (09) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலின் போது, பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எஸ்.எச்.சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார்.
ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் உணவுப் பற்றாக்குறை காரணமாக உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்குவதாகவும் அவர் விளக்கமளித்தார்.
உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மூன்று வேளை உணவைப் பெற முடியாத 10% மக்களுக்கு அரசாங்கம் இலவச உணவை வழங்க முடியும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
இந்த நிலையில் உண்மை நிலையை முன்வைப்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு ஊடக உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேவைப்படும்போது அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும், அதே நேரத்தில் பொறுப்பான அறிக்கையிடலை பின்பற்ற வேண்டும் என்றும் பிரதமர் ஊடகங்களை வலியுறுத்தினார்.
தற்போதைய நிலைமை குறித்து ஊடக உரிமையாளர்கள் வினவியபோது, பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளின் விளைவுகளை நாடு அனுபவிக்க நேரிடும் என பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
எவ்வாறாயினும், நிதி மற்றும் விநியோக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று அவர் கூறினார்.
சமூகத் துறையினரின் ஆதரவிற்காக 200 பில்லியன் ரூபா நிதிப் பாதுகாப்பு வலையமைப்பு ஒன்று திரட்டப்பட்டு வருவதாகவும் ஜப்பானின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் அவர்களின் ஆதரவைப் பெறவும் ஜப்பானுடன் கலந்துரையாடல் நடந்து வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உதவிகளை வழங்குவதில் நாடுகள் முன்னணியில் இருப்பதாகவும், ஆனால் எந்தவொரு நாடும் இலவச எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்காது எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
அடுத்த சில மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப ஊடக நிறுவனங்களின் ஆதரவை தாம் நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.