பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள போன்ற ஒரு அப்பாவியை கொன்று குவித்த செயற்பாட்டாளர்களின் உள்ளங்களில் வெறுப்பும், இரத்தமும் கலந்துள்ளதாகவும், எனவே இப்போராட்டம் இனி அப்பாவி அமைதியான போராட்டமல்ல எனவும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தொடர்பான அனுதாபப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிட்டு சரியாக ஒரு மாதத்தின் பின்னர் முன்னாள் பிரதமர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து உறுப்பினர்களும் கறுப்பு ரிப்பன் அணிந்து சபைக்கு வருகை தந்ததுடன், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு கையில் கறுப்பு நாடாவைக் கட்டிக் கொண்டார்.
அமரகீர்த்தி அத்துகோரல ஒரு அப்பாவி, பிரதேச மக்களுக்கு ஏதாவது செய்வதற்கு தன்னால் இயன்றதை செய்ய முயற்சித்தவர் என முன்னாள் பிரதமர் தெரிவித்தார். அவர் தனது அரசியலில் எந்த வித வன்முறையிலும் ஈடுபடவில்லை என்பது நினைவுகூரப்பட்டது.
போராட்ட இடத்தில் இருந்த மதத் தலைவர்கள் படுகொலைகளை நிறுத்துமாறு குரல் கொடுக்கவில்லை எனவும், அதனைக் கண்டிக்கவில்லை எனவும் முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.