எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பலம் வாய்ந்த அரசியல்வாதி ஒருவர் எதிர்காலத்தில் அரசாங்கத்துடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினராவார். அரசியலமைப்பின் 21வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்ட பின்னரும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அவர் அதனை மறுத்துள்ளார். எவ்வாறாயினும் களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்திருந்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினராக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வர்த்தகர் தம்மிக்க பெரேரா எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார். அவருக்கு அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தம்மிக்க பெரேரா நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்னர் அமைச்சரவை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பவித்ரா வன்னியாராச்சி அல்லது டயானா கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.