குறுகிய காலத்தில் தரமான அரச சேவையை வழங்கி ஊழியர்களின் திருப்தியை அதிகரிக்கும் நோக்கில் அரச சேவை தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வகிபாகம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வீட்டுத்தோட்டம் வேலைத்திட்டம் தொடர்பில் நேற்று (10) கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான சேவையை வழங்குவதற்காக அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தலைநகரில் உள்ள முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவதன் மூலம் கொழும்புக்கு வரும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அரச உத்தியோகத்தர்கள் தொடர்பிலான ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்துவது மற்றும் அவர்களிடமிருந்து அதிகபட்ச சேவையைப் பெறுவதற்கான திட்டங்களை வகுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சகங்கள் ஒருங்கிணைந்த தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தை “ஒன்றாக வளர்வோம் – நாட்டை வெல்வோம்” என்ற திட்டத்தை தொடங்க முடிவு செய்தன. ஒவ்வொரு பகுதியிலும் சாகுபடிக்கு ஏற்ற பயிர்களை துல்லியமாக கண்டறிய வேண்டியதன் அவசியத்தை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
விவசாயத் துறையில் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து அதிக உற்பத்தித் திறனைப் பெறுவதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெறுவதற்கு திட்டமிடுமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.