ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு கடவுச்சீட்டு பெற்றுக் கொள்வதற்காக பலர் இந்த நாட்களில் வருவதே இதற்குக் காரணம்.
தினசரி ஒரு நாள் சேவையில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் சராசரி எண்ணிக்கை சுமார் 2,000 ஆகும். அந்த எண்ணிக்கையை 3,500 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள ஊழியர்களை இரண்டு ஷிப்டுகளின் கீழ் அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இரண்டு ஷிப்டுகளும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையும் செயல்படும்.
இதேவேளை, அடுத்த வருடம் முதல் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய பிராந்திய அலுவலகங்கள் அனைத்து மாவட்ட செயலகங்கள் ஊடாக கடவுச்சீட்டுகளை வழங்கும் நடவடிக்கையினை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் நெரிசலை குறைக்க முடியும் எனவும் பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.