நாட்டின் பொருளாதார நிலைமை மேம்படும் வரை எரிபொருளுக்கான கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும், ஜூலை மாத தொடக்கத்தில் அது நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகன உரிமையாளர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவு செய்து அவர்களுக்கு தேவையான எரிபொருளை வாராந்தம் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் ஏற்படும் வரை எரிபொருள் விநியோகத்தை நிர்வகிக்க வேண்டும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஒரு வாரத்திற்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்கின்ற போதிலும், சில பாவனையாளர்கள் தமது இயந்திரங்கள் மற்றும் ஜெனரேட்டர்களுக்கான எரிபொருளை ஒரு மாதத்திற்கோ அல்லது அதற்கும் அதிகமாகவோ இருப்பு வைப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
டீசல், ஃபர்னஸ் ஆயில் மற்றும் நாப்தாவைத் தவிர, 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாதம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிட வேண்டியுள்ளது. எரிவாயு விநியோகத் தட்டுப்பாடு காரணமாக மின்சாரம் மற்றும் மண்ணெண்ணெய் தேவை அதிகரித்துள்ளதாகவும், நான்கு மாதங்களுக்கு முன்னர் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவு தற்போது 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.