கிடைக்கப்பெற்ற எரிபொருள் கையிருப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அடுத்த சில நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரசாங்க மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருள் இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வழங்குவதற்கும் வசதியாக செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சப்ளையர்களுடன் நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் நுழைவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் பொது போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களை பயன்படுத்தி பொலிஸாரின் மேற்பார்வையில் தனியார் மற்றும் சுற்றுலா பஸ்கள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.
தற்போதுள்ள எரிவாயு கையிருப்புகளை முறையாக விநியோகித்தல் மற்றும் போதியளவு இருப்புக்களை விரைவாக ஒழுங்குபடுத்துதல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.