கொழும்பில் இன்று காலை ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் நுழைவாயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு பௌத்த பிக்கு, நான்கு பெண்கள் மற்றும் 16 ஆண்களும் சந்தேக நபர்களில் அடங்குவதாக பொலிஸார் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
காலி முகத்திடலில் இடம்பெற்ற கோட்டகோகம ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் லோட்டஸ் வீதிக்கு அருகில் உள்ள ஜனாதிபதி அலுவலகம் மற்றும் நிதி அமைச்சின் இரு நுழைவாயில்களை நேற்றிரவு மூடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்பின்னர், இன்று காலையிலேயே போராட்டக்காரர்கள் கூடாரங்கள் அமைத்து, மற்ற போராட்டப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.
எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவாயிலை மறித்து அரச நிறுவனங்களுக்கு வருகை தரும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியதால், காவல்துறை மற்றும் சிறப்பு அதிரடிப்படை (STF) நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும்.
இன்று திறைசேரியில் நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடவிருந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும் இந்த எதிர்ப்புக்கள் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனவே, சந்தேகநபர்களை கைது செய்யவும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.