வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பொதுஜன பெரமுனையின் நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்த தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களை நிராகரிக்க உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்துள்ளது.
இந்த மனுக்கள் இன்று இரண்டாவது நாளாக நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அனில் ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவின் பின்னர் தனது தீர்மானத்தை அறிவித்த நீதியரசர் பிரியந்த ஜயவர்தன, உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இணக்கப்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்படுவதாக அறிவித்தார்.
மனுக்கள் மீதான பரிசீலனை இரண்டாவது நாளாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போது,
மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என பிரதிவாதி தம்மிக்க பெரேரா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.
தனது கட்சிக்காரர் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் பாராளுமன்றத்தில் அமரத் தகுதியுள்ளவரா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிட முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொதுத் தேர்தலில் மக்கள் முதலில் ஒரு கட்சிக்கே வாக்களிப்பார்கள் அன்றி அதன் வேட்பாளர்களுக்கு அல்ல என ஜனாதிபதி சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.
அதை சவால் செய்ய முடியாது என்றும் அவர் குறிபிட்டார்.