நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான நெல், அரிசியாக மாற்றப்பட்டு ‘பிஎம்பி ரைஸ்’ என்ற பெயரில் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டு விலையை விடவும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் அரிசியை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, இந்த அரிசி அடுத்த வாரம் கொழும்பு மக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.
இந்த அரிசி 5 மற்றும் 10 கிலோ பொதிகளில் விநியோகிக்கப்படவுள்ளதுடன், கொழும்பில் பல்வேறு இடங்களில் தேசிய உணவு ஊக்குவிப்பு சபை லொறிகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
200,000 அரிசி பொதிகளின் முதல் தொகுதி கொழும்பில் விற்பனை செய்யப்படவுள்ளது.
சதொச பல்பொருள் அங்காடி வலையமைப்பு மற்றும் நாடு முழுவதிலும் உள்ள பல்பொருள் அங்காடிகள் முழுவதும் அடுத்த பருவகாலத்தின் பின்னர் PMB அரிசி வர்த்தக நாமத்தின் கீழ் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.