பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் வைத்து ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் நேற்று இரவு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளை உள்ளடக்கிய சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
நேற்றைய போராட்டங்களை செய்தியாக்க சென்ற ஊடகவியலாளர்கள் மீது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தாக்குதல் நடத்தியமைக்கு தாம் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு நேற்றிரவு சிலர் தீ வைத்துள்ளனர். தீயினால் வீடு மற்றும் அதன் உடைமைகள் பலத்த சேதமடைந்துள்ளன. நேற்று இரவு 09 மணியளவில் ஏற்பட்ட தீ இன்று காலை 05 மணியளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக கொழும்பு மாநகரசபையின் தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் 04 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், தீயை கட்டுப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்தை நெருங்க முற்பட்ட தீயணைப்பு வாகனம் ஒன்றை சிலர் சேதப்படுத்தியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.