பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளனர். இவர்கள் கல்கிஸ்ஸ, ஜாஎல மற்றும் காலி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
பிரதமரின் கொள்ளுப்பிட்டி இல்லத்திற்கு நேற்றிரவு 9 மணியளவில் குழுவொன்று தீ வைத்துள்ளதுடன், இன்று காலை 5 மணியளவில் தான் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்கள அதிகாரிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டனர். இதற்காக 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 04 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தீயணைப்பு சேவை திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், அந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனம் வருவதைத் தடுக்கும் நோக்கில், குழு ஒன்று தீயணைப்பு வாகனம் ஒன்றை சேதப்படுத்தியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க வீட்டில் தங்கியிருந்தார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு அவரை வீட்டில் இருந்து வெளியேற்ற இராணுவ அதிகாரி கடுமையாக முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அப்போது வீட்டில் இருக்கவில்லை. மதியம் வேலை நிமித்தமாக வீட்டை விட்டு சென்றதே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது.
இந்த தீ விபத்தில் பிரதமரின் வீடு மற்றும் பல மதிப்புமிக்க பொருட்கள் பலத்த சேதமடைந்தன. அந்த வீட்டில் உள்ள நூலகத்தில் இருந்த ஏராளமான புத்தகங்களும் தீயில் எரிந்து நாசமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது நூலகத்தில் உள்ள புத்தகங்களை எதிர்காலத்தில் கொழும்பு றோயல் கல்லூரிக்கு கையளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மைத்திரி விக்கிரமசிங்கவும் தனது பல சொத்துக்களை தனக்கு கீழ் பணிபுரியும் மக்களுக்கும் ஏழை மக்களுக்கும் வழங்கியுள்ளார். . எனினும் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் திருமதி மைத்திரி விக்கிரமசிங்கவின் நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது.