நாடு தற்போது மிகவும் நெருக்கடியான கட்டத்தை எட்டியுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வேளையில் அனைத்து அரசியல் இயக்கங்களும், பொது மக்களும் மிகவும் புத்திசாலித்தனமாக செயற்படாவிட்டால் நாட்டில் பெரும் குழப்பத்தையும் சோகத்தையும் தோற்றுவிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க இன்று (13) பிற்பகல் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க,
“இப்போது, நாடு ஒரு முக்கியமான சில மணிநேரங்களைக் கடந்து செல்கிறது. நாடு மிகவும் தீர்க்கமான சோகத்தை எதிர்கொண்டுள்ளது. அதை ஏன் சொல்கிறோம்?
குறிப்பாக சபாநாயகர் கடந்த 13ம் திகதி ஜனாதிபதி பதவி விலகுவார் என அறிவித்தார். ஆனால் இப்போது மாலை நெருங்கிக்கொண்டிருக்கிறது, ஆனால் இன்னும் ஜனாதிபதி தனது பதவி விலகலை அறிவிக்கவில்லை.
அதற்கு பதிலாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக தற்போது எமக்கு தகவல்கள் கிடைக்கின்றன. இப்போது குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் கையகப்படுத்தப்பட்டுள்ள அதிகாரத்தை மிகவும் அடக்குமுறையாகவும் ஜனநாயக விரோதமாகவும் கையாள முயற்சிக்கிறார். இதன்படி மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வுகள் எதைக் காட்டுகின்றன? ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது ஆளும் குழுவோ மக்களின் குரலுக்கு செவிசாய்த்து, மக்களின் எழுச்சிக்கு செவிசாய்த்து இந்தப் பிரச்சினையை அமைதியாகவும் ஜனநாயக ரீதியாகவும் தீர்க்காமல், இருந்து வந்த சட்ட விதிகளுக்குள் அதிகாரத்தைப் பிரயோகித்து நாட்டை மிகவும் அவல நிலைக்குத் தள்ளுகின்றனர்.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது முடிவெடுக்கும் குழுக்களோ இந்த நேரத்தில் ஏதாவது அடக்குமுறை முறை மூலம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று நினைத்தால் அது மிகவும் ஆபத்தான சோகத்தில் முடிவடைவதை தவிர்க்க முடியாது.”