காலி முகத்திடல் பகுதியில் போராட்டம் இடம்பெற்று வரும் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இராணுவம், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர், பொலிஸார் ஆகியோர் போராட்டப் பகுதிக்குள் பிரவேசித்ததாக போராட்டப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை 1 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தினுடைய திசையிலிருந்து இராணுவப் படையினர் வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை அப்பகுதியிலிருந்து வெளியேற்றி முன்னேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயிலை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், போராட்டகாரர்கள் தங்கியுள்ள கூடாரங்களில் தங்கியிருப்பதாகவும், ஆனால் அதற்கு சில மீற்றர் தூரத்தில் இராணுவம் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக பொலிஸாரிடம் தொடர்பு கொண்டபோது முப்படையினர், பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று அதிகாலை 1.30க்கும் 2.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் நுழைந்து ஜனாதிபதி செயலகத்தில் வளாகத்திற்குள் இருந்த ஆர்ப்பாட்டகாரர்களை வெளியேற்றியதாக சிரேஷ்ட ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து களத்த்தில் இருந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது என்று பேச்சாளர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் இதுவரை 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பலதக்ஷ மாவத்தை சந்தி வரை உள்ள சகல கூடாரங்களையும் அகற்ற பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடல் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது 100 நாட்களையும் கடந்துள்ளது. நேற்றைய தினம், அலறி மாளிகைக்கு முன் இடம்பெற்ற “நோ டீல் வில்லேஜ்” போராட்டம் முடிவுக்கு வந்ததுடன், செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் நேற்று போராட்ட இடத்தை விட்டு வெளியேறினர்.