கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற இலங்கையர்கள் 46 பேர் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்று (05) நாட்டிற்க்கு அழைத்து வரப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழு ஜூலை 21 ஆம் திகதி ஆஸ்திரேலிய எல்லையில் ஆஸ்திரேலிய எல்லைப் படையால் கைது செய்யப்பட்திருந்தனர்.
அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்ட குழு படைக்கு சொந்தமான கப்பல் மூலம் மீண்டும் இலங்கைக்கு கொண்ண்டு வரப்படுவது இதுவே முதல் தடவை என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் 06 ஆம் திகதி மட்டக்களப்பு, வாழச்சேனை பிரதேசத்தில் இருந்து அவுஸ்திரேலியா நோக்கி பல நாள் மீன்பிடி படகில் ஏறிய இக்குழுவினர் வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்த 17 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள்.
இவ்வருடம் (ஆகஸ்ட் 05) இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 1024 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது..
மேலும் இவ்வருடம் இதுவரையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற 183 இலங்கையர்கள் அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.