ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு ஜப்பானிய பிரதமர் விடுத்துள்ள விசேட செய்தியில், மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமையினை இட்டு மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடிகள் மிக விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த ஜப்பானிய பிரதமர், இந்து சமுத்திரத்தில் சேவை மையமாக இலங்கையை பெரும் முன்னேற்றம் கொண்ட நாடாக மாற்ற முடியும் எனவும் தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 வருட பூர்த்தியை நினைவுகூரும் பிரதமர், நாட்டின் அபிவிருத்திக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட ஆர்வமாக உள்ளதாகவும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா குறிப்பிட்டுள்ளார்.