எரிபொருள் பிரச்சினை காரணமாக நாளை ஆரம்பமாகும் வாரத்தில் தனியார் பஸ்களின் ஓட்டம் 50 வீதத்தால் குறைவடையும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.
உரிய முறையில் எரிபொருள் கிடைத்தால் அடுத்த வாரம் முதல் பஸ்களை வழமையாக இயக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ்களுக்கு எரிபொருளை வழங்குவதற்காக கொழும்பு பஸ்டன் மாவத்தையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு எரிபொருளை வழங்குமாறு மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
எரிபொருளை உரிய முறையில் வழங்கினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ்களை பிரச்சினையின்றி இயக்க முடியும் எனவும் அதன் தலைவர் சரத் விஜித குமார குறிப்பிட்டுள்ளார்.