மின்கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது ஒரு புகைப்பட நகல் மற்றும் அச்சிடப்பட்ட பிரதியின் விலை குறைந்தது 5 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் இன்று (10) தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தை நியாயமற்ற முறையில் அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு வீடுகளிலும் வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட வேண்டுமென சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
தற்போது புகைப்பட நகல் எடுப்பதற்கு 10 முதல் 12 ரூபாய் வரை செலவாகும் எனவும் மேலும் விலை அதிகரிப்பு பாடசாலை மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போட்டோ பிரதி பேப்பரின் பொதியின் விலை 580 ரூபாயில் இருந்து 640 ரூபாவாக இருந்த நிலையில், ஒரு புகைப்பட நகல் ஒன்றின் விலை 4 முதல் 5 ரூபாய் வரை வசூலித்ததாகவும், தற்போது அதனுடைய விலை 3200 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.