முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் தமக்கு சிபாரிசு எதுவும் கிடைக்கவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் நீதியமைச்சின் கோரிக்கையின் பேரில் ஏற்கனவே நீதியமைச்சிற்கு விசேட அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காலம் மற்றும் அவர் சிறையில் இருந்த காலக்கெடு உள்ளிட்ட விரிவான அறிக்கை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம் அறிவிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதியமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.