இலங்கைக்கு வழங்கப்படும் அவசர உதவிகளை அதிகரிக்க அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான புதிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சுகாதாரம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அவுஸ்திரேலிய அரசாங்கம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக இலங்கைக்கு வழங்கவுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இவ்வாறான இக்கட்டான காலங்களில் இலங்கையுடன் இணைந்து செயற்படும் எனவும் அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் அவுஸ்திரேலியா 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவி நிதியாக இலங்கைக்கு வழங்கியிருந்தது. இந்த புதிய நிதி நன்கொடையின் மூலம், பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்ட நிதியின் அளவு 75 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.