கடந்த மே மாதம் முதல் தற்போது வரை இலங்கையில் இருந்து பயணிக்கும் 208 விமானங்கள் எரிபொருள் பெறுவதற்காக இந்தியாவின் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் பெற வந்த விமானங்களில் பெரும்பாலானவை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதன்படி கடந்த மே மாதம் முதல் நேற்று வரை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 130 விமானங்கள் எரிபொருள் பெறுவதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளன.
இதுதவிர இலங்கையில் இருந்து விமானங்களை இயக்கிய பிளை துபாய், ஓமன் ஏர், கல்ஃப் ஏர், ஏர் அரேபியா, எமிரேட்ஸ் ஆகிய விமானங்கள் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து எரிபொருள் பெற்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த மே மாதம் 27 ஆம் திகதி முதல் இலங்கையில் இருந்து பறக்கும் விமானங்கள் எரிபொருள் பெறுவதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.