வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ள விசேட கவுன்ட்டர் மூலம் சேவைகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் வெளிநாட்டு வேலைக்காக செல்வதற்கு தேவையான அடிப்படை பணிகளை பூர்த்தி செய்த விண்ணப்பதாரர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கிய கடிதத்தை தமது திணைக்களத்தில் உள்ள இந்த விசேட சாளரத்தில் சமர்ப்பித்து வெளிநாட்டு கடவுச்சீட்டை விரைவாக பெற்றுக்கொள்ள முடியும் என குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட கடும் நெரிசல் காரணமாக வெளிநாடு செல்லவிருந்த தொழிலாளர்கள் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தில் சிரமங்களை எதிர்கொண்டனர். இது தொடர்பில் கவனம் செலுத்திய அமைச்சர் மனுஷ நாணயக்கார, நேற்று அதிகாரிகளுக்கு வழங்கிய பணிப்புரைக்கு அமைய வெளிநாட்டு வேலை தேடும் தொழிலாளர்களின் கடவுச்சீட்டுகளை விரைவாக வழங்குவதற்கான சாளரத்தை திறந்து வைத்துள்ளார்.
வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் விமான நிலையத்தில் விசேட நுழைவு வாயில் திறக்கப்படும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.