பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 305 பொருட்களின் இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் பல துறைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு உரிய தீர்வுகளை எடுக்காவிட்டால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் சிறிமல் அபேரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 305 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொருட்களில் ஓடுகள், செங்கற்கள் மற்றும் மட்பாண்டங்கள் அடங்கும்.
மேலும், கட்டுமானத் தொழிலில் பயன்படுத்தப்படும் துளையிடும் கருவிகள், சுத்தியல் போன்ற கருவிகள் மற்றும் நிலத்தை தயார் செய்ய விவசாயத்தில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை தொடர்புடைய பொருட்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
எனினும், கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான வாகனங்கள், கிரானைட் போன்ற பல கட்டுமானப் பொருட்களை நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அத்தகைய இறக்குமதிகள் அங்கீகரிக்கப்பட்ட காண்டோமினியம் வீட்டுத் திட்டங்கள், கலப்பு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் முதலீட்டுச் சபையின் கீழ் வராத அரசாங்கத் திட்டங்களுக்குச் செய்யப்படலாம். திட்ட அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் மூலப்பொருட்களின் அளவுகள் 180 நாள் கடன் கடிதங்களின் கீழ் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என பல நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடப்பட வேண்டியவையாகும்.