ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க 7 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பூரண சுதந்திரம் வழங்கப்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு அரசியல்வாதியும் 06 மாதங்களுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டால், அவரது குடியுரிமை 07 வருடங்களுக்கு ரத்து செய்யப்படும். இருப்பினும், அரசியலமைப்பின் 34 (2) பிரிவின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டால், ஜனநாயக உரிமையும் வழங்கப்படுகின்றது. ஆனால் அரசியலமைப்பின் 34 (1) (ஈ) பிரிவின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க ஜனாதிபதியின் மன்னிப்புக்கு தகுதியானவர். இதன்படி 7 வருடங்களுக்கு ரஞ்சன் ராமநாயக்க தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ முடியாது.
எனினும், தேவைப்பட்டால் ரஞ்சன் ராமநாயக்கவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம் என நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு இவ்வாறான நிபந்தனையுடன் கூடிய பொதுமன்னிப்பு வழங்கப்பட்டு பின்னர் பூரண பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பூரண மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.