இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலால் ஏற்பட்ட சுற்றாடல் பாதிப்பு குறித்து கணக்கிடப்பட்டு தயாரிக்கப்பட்ட முதலாவது இடைக்கால அறிக்கை, கப்பல் விபத்து இழப்பீடு தொடர்பான நிபுணத்துவம் வாய்ந்த அவுஸ்திரேலிய சட்ட நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
நிறுவனத்திடம் இருந்து ஆலோசனை பெற்றதன் பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அதன் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹதபுர தெரிவித்தார்.
இந்த கப்பல் மூழ்கியதில் இருந்து வெளியேறும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகளை அகற்றி கரையை சுத்தப்படுத்துவதற்காக கப்பலின் காப்புறுதி நிறுவனத்திடம் இருந்து திறைசேரிக்கு முன்னர் 1.3 பில்லியன் ரூபா கிடைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான கொடுப்பனவுகளைத் தீர்ப்பதற்காக திறைசேரியிலிருந்து 903,857,293 ரூபாவைக் கோரி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை மீட்கும் பணியை கப்பலுக்கு சொந்தமான நிறுவனம் சீன நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்த நிலையில், புயலின் போது கடல் சீற்றம் ஏற்பட்டதால், கப்பலை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவி தர்ஷனி லஹதபுர தெரிவித்துள்ளார்.
எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பல் விபத்துக்குள்ளாகி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு எந்த அதிகாரியும் குறிப்பிட்ட காரணத்தினை இதுவரை தெரிவிக்கவில்லை.