செப்டெம்பர் 26ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தனிஷ் அலி உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களின் விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குருதுவத்தை பொலிஸாருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து அதன் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாக சந்தேகநபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு இன்று கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். இதன்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தானிஸ் அலி உட்பட இரண்டு சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசில் வசந்த என்ற சந்தேக நபரை 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுவிக்குமாறும் பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு செப்டம்பர் 26ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.