
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மருத்துவ சிகிச்சை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறு பசில் ராஜபக்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் நவீன் மாரப்பன மற்றும் காமினி மாரப்பன ஆகியோர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய அமர்வு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அது தொடர்பில், நீதிமன்றத்தின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதைத் தடுத்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் தடை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடப்பட வேண்டிய விடையமாகும்.